நாளை மகா கும்பாபிஷேகம்.. மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் இன்று திருப்பரங்குன்றம் புறப்பாடு

7 hours ago 3


முருகப்பெருமான் அருளாட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல்படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி ரூ.2 கோடியே 36 லட்சத்தில் 20 திருப்பணிகள் நடந்துள்ளது.

அதில் ரூ.90 லட்சத்தில் கோவிலின் கம்பீரமான சுமார் 125 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தில் பஞ்சவர்ணம் பூசப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் பிரதானமான கருவறையில் மின் விளக்குகள் பொருத்தல், பக்தர்கள் தரிசன வரிசையில் பித்தளை கம்பி பொருத்தல் உள்ளிட்ட சில பணிகள் நடந்துள்ளது.

இந்த நிலையில் 'கல்கம்' என்ற 55 வகையான மூலிகையை கொண்டு மருந்து சாத்தப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள சஷ்டி மண்டபம் மற்றும் வள்ளி தேவஸ்தான மண்டபம் வளாகத்தில் 75 குண்டங்கள் அமைத்து கடந்த 10-ந் தேதி யாக சாலை அமைக்கப்பட்டு முதல் கால வேள்விகள் நடந்தது.

கடந்த 11-ந் தேதி காலை மற்றும் மாலையில் 2-ம் கால, 3-ம் கால யாகவேள்விகள் நடந்தது. நேற்று காலையிலும், மாலையிலுமாக 4-ம் கால மற்றும் 5-ம் கால யாகவேள்வி நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 6-ம் கால மற்றும் 7-ம் கால யாக வேள்விகள் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு 8-ம் கால யாக வேள்விகள் நிறைவு பெறுகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்து வந்துள்ள 150 சிவாச்சாரியர்கள் யாகசாலை பூஜை செய்து வருகின்றனர். 85 ஒதுவார்கள் மூலம் தமிழ் வேத பாராயணம் நடந்து வருகிறது.

நாளை அதிகாலை 4.30 மணியளவில் யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ராஜகோபுரத்திற்கு தங்கம், வெள்ளி கடம் புறப்பாடு நடக்கிறது. அங்கு அதிகாலை 5.25 மணிக்கு ராஜகோபுரத்தின் 7 கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதே போல கோவிலுக்குள் உள்ள கோவர்த்தனாம்பிகையின் விமானம், விநாயகரின் விமானம் மற்றும் பசுபதி ஈசுவரர் விமானத்திற்கு மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 6.10 மணியளவில் கோவிலின் கருவறையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.

இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்கிறார்கள். கும்பாபிஷேக ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், நா.மணிச்செல்வன், கோவில் துணை கமிஷனர் சூரியநாராயணன், சிவாச்சாரியர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடக்க இருப்பதை முன்னிட்டு மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கோவில் இருந்து புறப்பாடாகி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எழுந்தருளுகிறார்கள்.

எனவே இன்று மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் கோவிலில் பூஜைகள் நடைபெற்று அன்று இரவு 10 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி நள்ளிரவு திருப்பரங்குன்றம் கோவிலை சென்றடைவர்.

அங்கு நாளை கும்பாபிஷேக விழாவில் எழுந்தருளி மீண்டும் இரவு திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து புறப்பாடாகி நள்ளிரவு மதுரை மீனாட்சி, சுந்தரேசுவரர் கோவிலில் வந்து சேர்த்தியாவார்கள். எனவே நாளை முழுவதும் மீனாட்சி அம்மன் கோவில் நடைசாத்தப்பட்டிருக்கும். இன்று மாலை 6 மணி முதல் மறுநாள் 14-ந் தேதி முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் பக்தர்களின் வசதிக்காக இன்று மாலை 6 மணி முதல் மற்றும் நாளை (14-ந் தேதி) முழுவதும் தற்போது வழக்கத்தில் உள்ளபடி கலைக்கூடத்திற்கும் (ஆயிரங்கால் மண்டபம்) மற்றும் அன்னதானத்திற்கும் அத்துடன் அன்றைய தினம் நடைபெறும் திருமணங்களுக்கு வன்னிமரத்தடி விநாயகர் கோவிலுக்கும் பக்தர்களை ஆடிவீதிகளில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 15-ந் தேதி வழக்கம் போல் அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

Read Entire Article