மதுரை : மதுரை, அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மே 8ம் தேதி தொடங்கியது. நாளை(மே 12) அதிகாலை அழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடக்க உள்ளது. இதற்காக சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் கண்டாங்கி பட்டு உடுத்தி, தங்கப்பல்லக்கில் நேற்று மாலை, அழகர் மலையில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மதுரை நோக்கி புறப்பட்டார். முன்னதாக 18ம்படி கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெறும் நிகழ்வு நடந்தது.
தொடர்ந்து பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் என வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இன்று காலை 6.30 மணியளவில் மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடியில் பக்தர்கள், அழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும். இன்றிரவு 11.30 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் தங்கி திருமஞ்சனமாகிறார். நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுந்தரராஜ பெருமாள், தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார்.
அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சாற்றிக்கொண்டு வைகை ஆற்றை நோக்கி புறப்படுகிறார். அதிகாலை 5.45 மணிக்குமேல் 6.05 மணிக்குள் அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். ஆண்டாள் சூடிய மாலை: நாளை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை, மதுரை கொண்டு செல்லும் வைபவம் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்றது. இதற்காக பிரமாண்டமான மாலைகள் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க ஆண்டாள் சூடிய மாலை மற்றும் ஆண்டாள் கிளிகள் மாட வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து மதுரை கிளம்பி சென்றது.
* மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு
கடந்த ஏப்.29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரை திருவிழாவின் 12ம் நாளான நேற்று கோயிலுக்குள் பட்டயக்கணக்கர் லட்சுமணன் சிவராமன் மண்டகப்படியில் மீனாட்சி அம்மன், சுவாமி சுந்தரேஸ்வரர் எழுந்தருளினர். உச்சிக்காலத்தில் தெய்வேந்திர பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனங்களில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும் 4 மாசி வீதிகளில் வீதி உலா வந்தனர். தொடர்ந்து இரவு கோயில் பொற்றாமரைக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. திருக்கல்யாணத்திற்காக வந்த திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி, பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகியோர் ஆடி வீதியில் உள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து விடைபெற்று திருப்பரங்குன்றம் சென்றனர்.
The post நாளை அதிகாலை வைகையாற்றில் இறங்குகிறார் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார் கள்ளழகர் appeared first on Dinakaran.