
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா. இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து 'சிந்துபாத்' என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்த நிலையில், விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள 'பீனிக்ஸ்'. இந்த படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.
பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் வரும் ஜூலை 4ம் தேதி படம் வெளிவருகிறது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி "என்னுடைய மகனைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியவில்லை. 2019ல் எனக்கு அனல் அரசு கதையை சொன்னார். ஆனால் அப்போது அதனை பண்ண முடியவில்லை. பிறகு சூர்யா இந்த கதையில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார். எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. என் பையனின் முடிவுகளை அவரே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன் சூர்யாவை கதை கேட்கச் சொன்னேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை என்னுடைய சினிமா அனுபவங்களை எப்போதும் என் குடும்பத்தில் பகிர்ந்து கொள்வேன்.

அவருடைய விசயங்களை அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன் அதனால் தான் படத்தின் பூஜை மற்றும் மற்ற விஷயங்கள் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை சூர்யாவிடம் அவ்வப்போது மகிழ்ச்சியாக உள்ளதா? என்று கேட்பேன் அவரும் உள்ளது என்பார். அவ்வளவுதான். அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் நன்றி . அனல் அரசு மூலமாக அவர் சினிமாவில் அறிமுகமாவது ஒரு பாக்கியம் என்று நினைக்கிறேன். இங்கே வந்து சூர்யா அவர்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் படம் நன்றாக வந்துள்ளது என்னை விட என் மனைவிக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணம் இது" என்றார்.