குடிப்பழக்கத்தை கைவிட சொல்லி காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

5 hours ago 1

நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த கொலக்கம்பை அருகே கீழ் பாரதி நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி சகீதா. இவர்களது மகன் ராகுல் (25 வயது). லாரி டிரைவர். இவருக்கும், கோவையில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

அவர்கள் தங்களது செல்போன் எண்களை பரிமாறி கொண்டு தினமும் பேசி காதலை வளர்த்து வந்தனர். அதே நேரத்தில் ராகுல், மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். இதை அறிந்த இளம்பெண், மது குடிக்கும் பழக்கத்தை கைவிடுமாறு ராகுலிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனாலும் அவர் கேட்காமல் மது குடித்து வந்தார்.

சம்பவத்தன்று ராகுல் மீண்டும் மது குடித்தார். தொடர்ந்து அவர் தனது காதலியிடம் பேச செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் ராகுல் குடிபோதையில் இருப்பதை அறிந்துகொண்ட அவரது காதலி பேச மறுத்து செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

உடனே ராகுல், அவரது தோழிகளை தொடர்பு கொண்டு காதலியை தன்னிடம் பேச அறிவுறுத்துமாறு கூறினார். ஆனாலும் அவரது காதலி, மது குடிக்கும் பழக்கத்தை கைவிடாவிட்டால் எப்போதும் அவரிடம் பேச மாட்டேன் என கண்டிப்புடன் கூறி பேச மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராகுல் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கொலக்கம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article