
கோவை,
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை பிரித்தால், தமிழகத்தில் இருக்க கூடிய தொகுதிகளில் 8 தொகுதியை இழக்க கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது பற்றி விவாதிக்க, மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில், கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு என்று எங்கேயும் சொல்லவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறார். யாருமே தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசாத நிலையில் முதல்-அமைச்சர் ஏன் கபட நாடகமாடுகிறார்? மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்த முயலும் முதல்-அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறேன்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்-அமைச்சர் தவறான தகவல்களை கூறுகிறார். மும்மொழிக்கொள்கையில் தோற்றதால் மடைமாற்றம் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார். நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என யார் சொன்னார்கள் என்பதை முதல்-அமைச்சர் தெரிவிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு பற்றி சொல்லாத நிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் ஏன்?
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யார் சொன்னார்கள் என்று கூறினால் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கும். மறுசீரமைப்பு வரும்போது தமிழகத்திற்கு பாதிப்பு வராமால் செய்வது எங்கள் பொறுப்பு. பெயிண்ட் எடுத்துச்செல்லும் திமுகவினர் இந்திக்கு பதில் ஆங்கிலத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.