நாகப்பட்டினம்: நாகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.82.99 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டி, ரூ.139.92 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, 38,956 பயனாளிகளுக்கு ரூ.200.27 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இவ்விழாவில் முதல்வர் பேசியதாவது: நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியில் 450 ஏக்கரில் ரூ.250 கோடி செலவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். விழுந்தமாவடி, காமேஸ்வரம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ரூ.12 கோடி மதிப்பில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். பழமை வாய்ந்த நாகை நகராட்சி கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.