மதுரை: திமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த மதுரை ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரையில் இன்று (ஜூன் 1) நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக பொதுக்குழுவுக்கு மதுரையை தேர்வு செய்யக் காரணம் தமிழகத்தின் தலைநகர் சென்னையாக இருந்தாலும், தமிழ்நாட்டில் கலாச்சார தலைநகரம் மதுரை. இன்றைக்கு தமிழ் கலாச்சாரத்தின் மீது ஒரு அத்துமீறலை பாசிச சக்திகள் செய்து கொண்டிருக்கிறார்கள். மதுரை மக்கள் உணர்ச்சி வசப்படும் மக்கள் மட்டும் அல்ல, வெள்ளந்தியான மக்கள். காலம் எத்தனை கோலம் கொண்டாலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவுக்கு வருகிற கூட்டம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருக்கிறது.