சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வந்தது.
இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 6ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இரவு 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.