நாகை-இலங்கை இடையே கப்பல் கட்டணம் குறைப்பு

4 hours ago 3


நாகை: நாகையில் இருந்து இலங்கைக்கு சுபம் கப்பல் நிறுவனம் சார்பில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலில் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் 250 பயணிகள் பயணிக்கும் மற்றொரு கப்பல் சேவை துவங்க உள்ளது. இதுகுறித்து சுபம் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் கூறியதாவது; நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு துவங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து சேவை சிறப்பாக நடந்து வருகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் கப்பல் போக்குவரத்து சேவை செய்யப்பட்டு வருகிறது. கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பலில் இலங்கை நாட்டுக்கு கடல் வழியாக சொகுசு பயணம் மேற்கொள்ள ஏற்கனவே டிக்கெட் விலை ரூ.8,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை சென்று வருவதற்கு ரூ.8000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கப்பலில் பயணிக்கும் பயணிகள் 10 கிலோ மட்டுமே லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதி இருந்த நிலையில் தற்போது 22 கிலோ வரை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டிக்கெட் விலையில் 10 சதவீத தள்ளுபடியும் அவர்களை வழிநடத்தி செல்லும் ஒரு ஆசிரியருக்கு இலவச டிக்கெட் என்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் 3 மணி நேரத்தில் இலங்கையை சென்றடையும் வகையில் 250 பயணிகள் பயணிக்கும் மற்றொரு கப்பல் சேவை நாகை துறைமுகத்தில் இருந்து துவங்கப்படும். ஜூலை முதல் வாரத்தில் இருந்து சரக்கு கையாளும் கப்பல் சேவை துவங்குகிறது. ரூ.15 ஆயிரம் முதல் சுற்றுலா திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

The post நாகை-இலங்கை இடையே கப்பல் கட்டணம் குறைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article