கீவ்: தன்னை நட்பு நாடு என்று கூறிக் ெகாள்ளும் நிலையில் இந்திய மருந்து நிறுவனம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த 2 ஆண்டாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய மருந்து நிறுவனம் ஒன்றின் சேமிப்புக் கிடங்கு மீது ரஷ்ய ஏவுகணை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம் இந்தத் தகவலை உறுதிபடுத்தி உள்ளது. இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான குஸும் நிறுவனத்தின் கிடங்கில்தான் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் தூதரகம் வெளியிட்ட பதிவில், ‘இந்திய வணிக நிறுவனங்களை குறிவைத்து ரஷ்யா வேண்டுமென்றே தாக்கி வருகிறது. அந்த வகையில் இந்திய மருந்து நிறுவனமான குஸுமின் உக்ரைன் கிடங்கு மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தியாவுடன் சிறப்பு நட்பு இருப்பதாகக் கூறிக் கொள்ளும் ரஷ்யா, வேண்டுமென்றே இந்திய வணிக நிறுவனங்களை குறிவைத்து தாக்குகிறது. இந்த கிடங்கில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான மருந்துகள் இருந்தன. தற்போது அந்த மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.
ரஷ்யத் தாக்குதலில் கீவில் உள்ள ஒரு முக்கிய மருந்து நிறுவனக் கிடங்கு அழிக்கப்பட்டதை உக்ரைனுக்கான இங்கிலாந்து தூதர் மார்ட்டின் ஹாரிஸும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், தாக்குதலை நடத்தியது ரஷ்ய ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) என்றும், ஏவுகணை அல்ல என்றும் அவர் கூறுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யாவின் எரிசக்தி நிறுவனங்கள் மீது உக்ரைன் ஐந்து தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியிருந்தது. இந்தியத் தொழிலதிபர் ராஜீவ் குப்தாவுக்குச் சொந்தமான குஸும் நிறுவனம், உக்ரைனின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றாகும். அத்தியாவசிய மருந்துகளின் விநியோகத்தை உறுதி செய்வதால், இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் உக்ரைன் முழுவதும் உள்ளன. இந்த விவகாரம் குறித்து இந்திய அரசோ அல்லது ரஷ்யாவோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
The post நட்பு நாடு என்று கூறிக் ெகாள்ளும் நிலையில் இந்திய மருந்து நிறுவனம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: உக்ரைன் தூதரகம் தகவல் வெளியீடு appeared first on Dinakaran.