
ஐதரபாத்,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது கிங்டம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளது.
நடிகர் சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கருத்துகளுக்கு பழங்குடி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள ராய்துர்கம் காவல் நிலையத்தில் முறையாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
விஜய் தேவரகொண்டா ஏப்ரல் 26ம் தேதி 'ரெட்ரோ' படத்திற்காக நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
"காஷ்மீர் மக்கள் நம்மைப் போன்றவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'குஷி' படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றிருந்தேன். அவர்களுடன் எனக்கு பல நல்ல நினைவுகள் இருக்கின்றன. தனது சொந்த நாட்டு மக்களை பாகிஸ்தானால் கவனித்துக் கொள்ள முடியவில்லை. அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, ஆனால் அவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துகிறார்கள். இது இப்படியே தொடர்ந்தால், பாகிஸ்தானை இந்தியா தாக்க வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தான் மக்களே வெறுப்படைந்து தங்கள் அரசை தாக்கி விடுவார்கள். அவர்கள் குறைந்தபட்ச பொது அறிவு இல்லாமல், 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் போல நடந்துக்கொள்கிறார்கள். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என கூறினார். இந்த கருத்து, பழங்குடி மக்களின் உணர்வுகள் புண்படுத்தும் விதத்தில் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.