மும்பை: மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அங்குள்ள வனப்பகுதியில் பல ஆண்டுகளாகவே நக்சல்களின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி, கட்சிரேலியில் உள்ள புல்னார் வனப்பகுதியில் சி-60 கமாண்டோ பிரிவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சல்களுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் போலீசார் போராடி நக்சல்கள் பதுங்கியிருந்த முகாமை வெற்றிகரமாக அழித்துள்ளனர். ஆனால் இந்த நடவடிக்கையின்போது நக்சல்களுக்கும் போலீசாருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் காவலர் நகுல்வர் (வயது 39) காயமடைந்தார்.
அவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு கட்சிரோலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் நக்சல் இல்லாத இந்தியாவுக்கான முயற்சியில் நகுல்வாரின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது. தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பு வீண் போகாது என்று மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். மேலும் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நிதியுதவி வழங்கப்படும் மராட்டிய முதல்வர் அறிவித்துள்ளார்.
The post நக்சல் தாக்குதலில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி: மராட்டிய முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.