நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமீன்

2 months ago 15

சென்னை,

மராட்டியத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகரும், பேச்சாளருமான குணால் கம்ரா அண்மையில் தனது யூடியூப் சேனலில் ஏக்நாத் ஷிண்டேவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதாவது சிவசேனாவை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனதை துரோகி என அவர் கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் கோபம் அடைந்த சிவசேனா கட்சியினர் அந்த நிகழ்ச்சியைப் பதிவு செய்த ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினார்கள். மேலும் குணால் கம்ராவுக்கும் மிரட்டல் விடுத்தனர். இதனைத் தொடந்து துணை முதல்-மந்திரியை அவதூறாக பேசியதாக குணால் கம்ராவுக்கு மும்பை போலீசார் இரண்டு சம்மன் அனுப்பி மார்ச் 31ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில், குணால் கம்ரா சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் நிரந்தரமாக வசிப்பவர் என்பதால் அவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ''தனது சொந்த ஊர் விழுப்புரம் என்றும் தான் மும்பை சென்றால் தன்னை போலீசார் கைது செய்வார்கள் என்றும், சிவசேனா தொண்டர்களால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாகவும் எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். குணால் கம்ரா மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ். சுந்தர் மோகனிடம் முறையிட்டு இருந்தார். இந்த வழக்கை மதியம் விசாரிப்பதாக நீதிபதி கூறியிருந்தார். அதன்படி குணால் கம்ரா மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

குணால் கம்ரா ஒரு நகைச்சுவை பேச்சாளர் என்றும் நகைச்சுவைக்காக பேசியதை வைத்து ஸ்டூடியோவை அடித்து நொறுக்கி அவருக்கு மந்திரி கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்றும் இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும் குணால் கம்ரா சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை கேட்ட நீதிபதி குணால் கம்ராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் ஏப்.7-ம் தேதிக்குள் பதில் மனுதாக்கல் செய்ய மும்பை கார் போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்.

Read Entire Article