
மும்பை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக இந்த சீசனில் சென்னை அணியில் இடம் பெற்றிருந்த வன்ஷ் பேடிக்கு மாற்று வீரராக இளம் வீரரான உர்வில் படேலை ஒப்பந்தம் செய்தது. அந்த வாய்ப்பில் 3 போட்டிகளில் விளையாடிய அவர் 68 ரன்கள் அடித்தார். குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 31 ரன்கள் அடித்து சென்னை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் மகேந்திரசிங் தோனி தலைமையில் விளையாடியது குறித்து உர்வில் படேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அதில், "எம்.எஸ். தோனியின் தலைமையின் கீழ் விளையாட கிடைத்த நம்பமுடியாத வாய்ப்புக்கு நன்றி. தல (தோனி) உடன் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த ஒவ்வொரு தருணமும் தலைசிறந்ததாக இருந்தன. ஏற்கனவே நான் அவருடன் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். மேலும் அவரது வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்து வளர நான் உற்சாகமாக இருக்கிறேன்.
டிரெஸ்ஸிங் ரூமில் அவருடன் நிற்பது முதல் போட்டியின்போது மைதானத்தைப் பகிர்ந்து கொள்வது வரை, ஒவ்வொரு நொடியும் ஒரு கனவு நனவாகியது போல் உணர்ந்தேன். அதை அனுபவிக்க என் குடும்பத்தினர் அங்கு இருந்தது இன்னும் சிறப்பானது. அவை நாங்கள் ஒருபோதும் மறக்க முடியாத தருணங்கள்.
தற்போது என்னிடம், "வாழ்த்துகள் உர்வில்" என்று தோனி கையெழுத்திட்ட ஜெர்சி என்னிடம் உள்ளது. அதனை பிரேம் போட்டு வைத்துக்கொள்வேன். உண்மையிலேயே ஒரு சிறந்த தலைவர் மற்றும் சிறந்த மனிதருடன் ஊக்கமளிக்கும் பயணம்" என்று பதிவிட்டுள்ளார்.