
அகமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால் முதல் கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி குறித்து பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் சில கருத்துகளை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஸ்ரேயாஸ் ஐயரை மீண்டும் இறுதிப்போட்டியில் சந்திப்பது இனிமையான விஷயம். ஆனால், இது புதிய சவால். அதற்கு ஏற்ப தயாராகி உள்ளோம். இந்திய அணிக்காகவும், பெங்களூரு அணிக்காகவும் விராட் கோலி பல ஆண்டுகளாக நிறைய பங்களிப்பை அளித்துள்ளார். அவருக்காக இந்திய ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.