தோனி கிரிக்கெட்டின் பாகுபலி - இந்திய முன்னாள் வீரர் புகழாரம்

1 month ago 6

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 63 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

பின்னர் 167 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷிவம் துபே 43 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் சென்னை அணி மிடில் வரிசையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது 6-வது விக்கெட்டுக்கு இம்பேக்ட் வீரர் ஷிவம் துபேவுடன் கேப்டன் தோனி கூட்டணி அமைத்தார். இதில் அதிரடியாக விளையாடிய தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து சென்னை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்றிருந்த சென்னை அணி ஒரு வழியாக தோனி தலைமையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது.

அத்துடன் தலா ஒரு ஸ்டம்பிங், கேட்ச் மற்றும் ரன் அவுட் உட்பட இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடி சென்னை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த தோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு தோனி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தோனியை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தோனியை கிரிக்கெட்டின் பாகுபலி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "எம்எஸ் தோனி கிரிக்கெட்டின் பாகுபலி. அவர் மேல் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தபோது என்ன செய்ய முடியும் என்பதை உலகிற்குக் காட்டிய கேப்டன். பேட்டிங் வரிசை 9 அவருக்குப் பொருந்தாது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கு எதிராக அவர் சரியான நிலையில் வந்தார். அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். இறுதி கட்டத்தில் சிவம் துபேவுக்கும் உதவினார்.

இப்போதும் திறமையைக் கொண்டுள்ள தோனி கடிகாரத்தை திருப்பினார். பவுலிங் மாற்றங்களை சிறப்பாக செய்த அவர் கேப்டனாக வந்ததும் அனைத்தும் வித்தியாசமாக தெரிகிறது. அவர் வித்தியாசமாக பேட்டிங் செய்கிறார். அவர் சரியான இடத்திலும் நேரத்திலும் பேட்டிங் செய்ய வந்தார், லக்னோ மீது அழுத்தத்தை ஏற்படுத்தினார்.

அவர் 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அழுத்தத்தை உடனடியாக எடுத்துக் கொண்டார். தோனி கேப்டன் பொறுப்பை ஏற்கும்போது, அவர் முற்றிலும் வேறுபட்டவர். அவருக்குக் கீழ் உள்ள அணி வித்தியாசமாக விளையாடுகிறது. சிஎஸ்கேவுக்கு வாழ்த்துகள். தோனிக்கு வாழ்த்துகள். அப்துல் சமத்தை அவர் ரன் அவுட் செய்ததும் அதிர்ஷ்டம் இருக்கிறது. தோனிக்கு எப்போதும் அதிர்ஷ்டம் அற்புதங்களை நிகழ்த்துகிறது. தோனி இருக்கும் போது அனைத்தும் சாத்தியம்" என்று கூறினார்.

Read Entire Article