* சிறப்பு செய்தி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை அனைத்து நிலைகளிலும் முன்னேற்றத்தினை அடைந்திடும் பொருட்டு, சமூக – பொருளாதார மேம்பாட்டு திட்டம், தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி, பள்ளி மற்றும் விடுதி கட்டிடங்கள் கட்டுதல்; அதனை பராமரித்தல் போன்ற பணிகள் தாட்கோ என்றழைக்கப்படும் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இதில் ஒரு அங்கமாக விளிம்பு நிலை மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த மானியத்துடன் கூடிய பொருளாதார மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் திட்டங்கள் என்பது வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியுடனும், தேசிய பட்டியலினத்தோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம், தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் தேசிய தூய்மை பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற்று தொழில் நடத்துவதற்கு இத்திட்டம் ஏதுவாக உள்ளது. இதில் மாநில அரசின் சார்பில், முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் (சி.எம்.அரைஸ்) செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகையை முன்விடுவிப்பு மானியமாக வங்கி வழியாக வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், வங்கியில் கடன் தவணையை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பயனடைய குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ப கடன் அளிக்கப்படுகின்றன.
குறிப்பாக தமிழக முதல்வராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் விளிம்பு நிலை மக்களுக்காக கடந்த 2023-24ம் ஆண்டு சி.எம்.அரைஸ் (CM-ARISE) என்ற திட்டத்தினை தொடங்கினார். இந்த இரண்டு நிதியாண்டுகளில் மட்டும் ரூ.90 கோடி வரை மானியம் வழங்கப்பட்டு இதன் மூலம் 5000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இதில், 89 சதவீதம் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள், 7 சதவீதம் சிறு வணிக கடைகள், 6 சதவீதம் ஆடையகம், 6 சதவீதம் கட்டட தொழில்கள் போன்றவை வாயிலாக கடன் அளிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், மாநில அரசு நிதியுதவி தொழில் முனைவோர் திட்டத்திற்கு அளித்து வந்தாலும், ஒன்றிய அரசின் மூலமாக பிரதமரின் ஆதிதிராவிடர்களுக்கான முன்னேற்ற திட்டம் என்பது நடைமுறையில் இருந்து வருகின்றன. இதில் தனி நபருக்கான திட்ட தொகையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் இதில் எது குறைவானதோ அத்தொகையை வருவாய் ஈட்டும் தொழில்கள் புரிந்திட வங்கிகள் மூலம் முன் விடுவிப்பு மானியத்துடன் கூடிய கடன் என்பது வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் மட்டும் 10,740 பயனாளிகளுக்கு ரூ.52.62 கோடி மானியமாக செலவிடப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தொழில் வளர்ச்சி மேம்படும் விதமாக கடந்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக ரூ.2,353 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.523 கோடி மானியத்தில் அடங்கும்.
இதுகுறித்து தாட்கோ மேலாண் இயக்குநர் கந்தசாமி கூறியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை தொழில்முனைவோராக்கும் பொருட்டு, பல்வேறு திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் தாட்கோ மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் ஒருவர் தொழில் செய்ய விரும்பினால் அவர் முதலில் இ-சேவை மூலமாக தங்களின் முழு விவரத்தினையும் பதிவு செய்ய வேண்டும். அவற்றில் தொழில் செய்வதற்கான திட்ட மதிப்பீடு, பெற வேண்டிய கடன் தொகை உள்ளிட்டவற்றை முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு என்பது ஏதுமில்லை. அதேபோல் கல்வி தகுதியும் தேவையில்லை. ஒரு பயனாளியின் மொத்த திட்ட மதிப்பில் 65 சதவீதம் அவருக்கு வங்கி கடனாக ஏற்பாடுகளை செய்து தருகிறோம். மீதமுள்ள 35 சதவீத தொகை அரசு மானியமாக அளிக்கின்றன. இதில், எந்தவித மிடில் மேன் பிரச்சனை என்பது இல்லை. பயனாளிகளின் வங்கி கணக்கில் அவரது கடன் தொகை வங்கிகள் மூலமாக அனுப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்றிய-மாநில அரசுகள் இணைந்து தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட கடன் தொகை
வருடம் பயனாளிகள் மானிய தொகை கடன் தொகை
2020-21 12,685 ரூ.102 கோடி ரூ.223 கோடி
2021-22 22,161 ரூ.108 கோடி ரூ.220 கோடி
2022-23 16,212 ரூ.127 கோடி ரூ.285 கோடி
2023-24 13,882 ரூ.91 கோடி ரூ.960 கோடி
2024-25 11,807 ரூ.95 கோடி ரூ.142 கோடி
மொத்தம் 76,747 ரூ.523 கோடி ரூ.1,830 கோடி
* கடன் வழங்குவதை துரிதப்படுத்த குழு
ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் வங்கிகள் விரைவாக பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்குவதை துரிதப்படுத்தவும், சொத்து உருவாக்கத்தை உறுதி செய்வதற்கும் ஓய்வு பெற்ற வங்கி அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு மூலமாக தாட்கோ இணையதளத்தில் மானியத்துடன் கூடிய கடன் பெற விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்கு மாவட்ட மேலாளரை தலைவராகவும், மண்டல திட்ட வங்கி மேலாளர் உறுப்பினராகவும், தாட்கோவின் மேலாண் இயக்குநர் பரிந்துரைக்கப்படும் பிரதிநிதியை உறுப்பினராக கொண்டு செயல்படுகிறது.
* சி.எம்.அரைஸ் கடனுதவி அளிக்கும் தொழில்கள்
பல்பொருள் அங்காடி, எழுதுபொருள் விற்பனை அங்காடி, உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம், தையலகம், மின்சாதனங்கள் விற்பனை, உணவகம், வாகன உதிரி பாகங்கள் விற்பனையகம், செல்லிடை பேசி பராமரிப்பு மையம், துணிக்கடை, கட்டுமான பொருட்கள் விற்பனையகம், இலகுரக கனரக வாகனங்கள் மற்றும் மகிழுந்து வாகனம் வாங்குதல் போன்ற தொழில்களை மேற்கொள்ள தமிழக அரசின் சார்பில் கடனுதவி அளிக்கப்படுகிறது.
ஒன்றிய அரசின் சார்பில் கடனுதவி அளிக்கும் தொழில்கள்
* கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் ஆடு வளர்ப்பு
* மீன் வளர்ப்பு, மீன்பிடி படகு மற்றும் வலை வாங்குதல்
* பல்பொருள் அங்காடி, எழுது பொருள் விற்பனையகம், உடற்பயிற்சி கூட்டம், அழகு நிலையம் போன்ற தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகின்றன.
The post தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மானியத்துடன் ரூ.2,353 கோடி கடன்: பயனடைந்த 76,000 பேர்; சி.எம்.அரைஸ் மூலம் 2 ஆண்டில் ரூ.90 கோடி மானியம்; தாட்கோ இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.