சிதிலமடைந்து கிடக்கும் பூங்கா கட்டிடங்கள் சொத்தவிளை கடற்கரை அழகுபடுத்தப்படுமா?: சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

3 hours ago 2


நாகர்கோவில்: சொத்தவிளை கடற்கரையை அழகுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குமரி மாவட்டம் நீண்ட நெடிய அழகிய கடற்கரைகளை கொண்டதாகும். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மட்டுமல்ல, சொத்தவிளை, சங்குதுறை, லெமூர் பீச், முட்டம், தேங்காப்பட்டணம் என ஆரோக்கியபுரம் தொடங்கி நீரோடி வரை கடற்கரைகள் அழகானவை ஆகும். அரபிக்கடல் சங்கமிக்கும் மணக்குடி காயல், மாங்குரோவ் காடுகளுடன், அழகிய சோலையாக காட்சி தருகிறது. இயற்கையாகவே அழகு தன்மை மிகுந்த இந்த கடற்கரைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இந்தநிலையில் நாகர்கோவிலில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள சொத்தவிளை கடற்கரைக்கும் நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். மாலை வேளையில் மன அமைதியாக கடற்கரையில் அமர்ந்து பொழுதை கழிக்கிறார்கள். அன்புடன் தழுவும் குளிர்ந்த கடல் காற்று, இயற்கையுடன் ஒன்றாக இருப்பது போன்ற கவர்ச்சிகரமான உணர்வு என மனதை இதமாக வைக்கும் கடற்கரை, சொத்தவிளை தான்.

ஒரு அழகான விடுமுறைக்கு ஏற்ற அமைப்பாகும், 4 கிமீ நீளம் கொண்ட சொத்தவிளை தமிழகத்தின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். கடற்கரை ஆழமற்ற நீரால் சூழப்பட்டுள்ளது. 2004 சுனாமியில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சொத்தவிளையும் ஒன்றாகும், அதன் பின்னர் கடற்கரை புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. கழிவறைகள், காட்சி டவர், இருக்கை வசதிகள், பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் என சொத்தவிளையில் அமைக்கப்பட்டன.

சொத்தவிளை கடற்கரையையொட்டி இப்போது அதிகளவில் ரிசார்ட்டுகள் வர தொடங்கி உள்ளன. இதனால் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கூட, சொத்தவிளை கடற்கரைக்கு வந்து ரசிக்கிறார்கள். ரிசார்ட்டுகளில் இரவில் பொழுதை கழிப்பவர்கள், கடற்கரையில் அமர்ந்து அதன் அழகை ரசித்த வண்ணம் உள்ளன. கன்னியாகுமரியில் வளர்ந்து வரும் சுற்றுலா தலமாக சொத்தவிளை உள்ளது.

ஆனால் சொத்தவிளை நிலைமை அங்கு வருபவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இங்கு கடந்த 2005ல் அப்போதைய மாவட்ட கலெக்டர் சுனீல்பாலிவால் உத்தரவின் பேரில் ரூ.16 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. கழிவறைகள், காட்சி டவர் உள்ளிட்டவை அமைந்தன. கடற்கரையையொட்டி அழகிய சுற்றுசுவர்கள் அமைந்தன. தற்போது புனரமைக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகி விட்டன. அதன் பின்னர் எந்த வித பராமரிப்பு நிதியும் வழங்கப்படாததால், சொத்தவிளை கவனிப்பாரின்றி கிடக்கிறது.

உடைந்து போன சுவர்களுக்கு இடையே அமர்ந்தும், உடைந்த உபகரணங்களில் விளையாடியும் குழந்தைகள், சுற்றுலா பயணிகள் பொழுதை கழிக்கிறார்கள். சமீபத்தில் முட்டம் கடற்கரையில் சுமார் ரூ.2 கோடியில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. அதே போல் சொத்தவிளை கடற்கரைக்கும் சுற்றுலா மேம்பாடு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து புனரமைக்க வேண்டும். கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக ரிசார்ட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையும் ஆய்வு செய்து, கடற்கரை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சொத்தவிளை கடற்கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் திறந்த பின், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரிக்கும், நாகர்கோவிலுக்கும் இடையில் சொத்தவிளை கடற்கரை அமைந்துள்ளதால், கன்னியாகுமரிக்கு வருபவர்கள் சொத்தவிளையை நோக்கியும் பயணிக்கிறார்கள். எனவே சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுத்து, சொத்தவிளை கடற்கரையை அழகுப்படுத்த வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post சிதிலமடைந்து கிடக்கும் பூங்கா கட்டிடங்கள் சொத்தவிளை கடற்கரை அழகுபடுத்தப்படுமா?: சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article