மக்களவை தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும். அதுவரை, 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தற்போது உள்ள மக்களவை தொகுதிகளின் நிலை நீடிக்க வேண்டும் என்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டு குழு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், தங்கள் மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து, நாடாளுமன்றத்தில் மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று மத்திய அரசுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது.