
தைபே,
தைவான் ஓபன் சர்வதேச தடகள போட்டி தைபே சிட்டியில் 2 நாட்கள் நடந்தது (சனி மற்றும் ஞாயிறு). இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்தனர்.
2-வது நாளான நேற்று பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த வித்யா ராம்ராஜ் 56.53 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா 2 நிமிடம் 02.79 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கமும், மற்றொரு இந்திய வீராங்கனை டிவிங்கிள் சவுத்ரி 2 நிமிடம் 06.96 வினாடிகளில் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி (56.82 மீட்டர்) தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். பெண்கள் நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் (6.41 மீட்டர்), அன்சி சோஜன் (6.39 மீட்டர்) முறையே வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை பெற்றனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ரோகித் யாதவ் ( 74.42 மீட்டர் தூரம் ), 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிருஷ்ண குமார் ( 1 நிமிடம் 48.46 வினாடி) ஆகிய இந்தியர்களும் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினர். ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சந்தோஷ், விஷால், தரம்வீர் சவுத்ரி, மனு ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 05.58 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை வென்றது.