மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

3 hours ago 2

சென்னை,

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் 18 பேரில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வை சேர்ந்த வைகோ, அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க.வை சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.

அதனைத் தொடர்ந்து, புதிதாக 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வரும் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் கடந்த 6-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல், அ.தி.மு.க. தரப்பில் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். மேலும்,சுயேச்சைகள் 7 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், இன்று மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. மொத்தம் 13 பேர் களத்தில் உள்னனர். நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 12-ந் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலையே வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியாகும். சுயேச்சையாக மனு செய்துள்ள 7 பேரின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்படும் என தெரிகிறது.

அதன்பிறகு, தேர்தல் களத்தில் 6 பேர் மட்டுமே நீடிக்க வாய்ப்பு இருப்பதால், தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேரும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு இருக்கிறது.

 

Read Entire Article