
புதுடெல்லி,
மும்பையில் ரெயிலில் இருந்து விழுந்து பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"மோடி அரசாங்கம் 11 ஆண்டுகால 'சேவையை' கொண்டாடும் அதே வேளையில், மும்பையில் ரெயிலில் இருந்து விழுந்து பலர் உயிரிழந்ததாக வரும் துயரச் செய்திகள் நாட்டின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு முதுகெலும்பாக உள்ள இந்திய ரெயில்வே, இன்று அது பாதுகாப்பின்மை, நெரிசல் மற்றும் குழப்பத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
மோடி அரசாங்கத்தின் 11 ஆண்டுகால ஆட்சியில் பொறுப்புக்கூறல் இல்லை, மாற்றம் இல்லை, பிரசாரம் மட்டுமே உள்ளது. மோடி அரசாங்கம் 2025 பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, இப்போது 2047 பற்றிய கனவுகளை விற்க ஆரம்பித்துவிட்டது.
இன்று நாடு எதை எதிர்கொள்கிறது என்பதை யார் பார்ப்பார்கள்? ரெயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்."
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.