சென்னை: “திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதி மட்டும் நிலுவையில் உள்ளது. ஆனால், அதற்கும் ஒரு குழு அமைத்துள்ளார் முதல்வர். வாக்குறுதிகளில் சொல்லாத பலவற்றை இந்த அரசு செய்துள்ளது. எங்கு விவாதத்தை வைத்தாலும் நான் வரத் தயார். ஆனால். இந்தியில் மட்டும் பேசக்கூடாது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக எம்.பி ஆ.ராசா பதிலளித்துள்ளார்.
சென்னையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா இன்று (ஜூன் 9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரையில் பேசிய பேச்சு அப்பட்டமான பொய் , அருவருப்பான வஞ்சகம் , பிளவு நோக்கம் கொண்ட சூதுரை. இந்த மூன்றையும் தவிர அவரின் பேச்சில் என்னால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாட்டின் உள்துறை அமைச்சர் ஒரு மாநிலத்துக்கு வரும் போது, அவருக்கு இருக்கும் தகுதி, பொறுப்பு, கடமை உணர்ச்சி ஆகியவற்றை கிஞ்சிற்றும் கவலைகொள்ளாமல், அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார்.