
புதுடெல்லி,
2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த 345 அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், இக்கட்சிகளின் அலுவலகங்களை எங்கும் நேரடியாக வைத்திருக்க முடியாது. எதிர்காலத்தில் இக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட 2,800-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில், பல கட்சிகள் தங்களின் அத்தியாவசிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன என்பது ஆணையத்தின் கவனத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, இக்கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.