
புதுடெல்லி,
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தலின் போது வாக்குப்பதிவு சதவீதத்தை குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தல் கமிஷன் வெளியிடுவது வழக்கம். சில நேரங்களில் வாக்குப்பதிவு சதவீதத்தில் முரண்பாடு ஏற்படுகிறது. இந்த முரண்பாட்டை தவிர்த்து மிக துல்லியமாக வாக்குப்பதிவு சதவீதத்தை அரசியல் கட்சியினர் மற்றும் வாக்காளர்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் வி.டி.ஆர். எனப்படும் செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு தினத்தன்று ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை இந்த செயலியில் வாக்குப்பதிவு விவரம் துல்லியமாக பதிவேற்றம் செய்யப்படும். இணையதள வசதி இல்லாத வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அலுவலரிடம் இருந்து உடனடியாக இந்த விவரங்களை பெற்று செயலியில் விரைந்து பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பீகார் தேர்தலுக்கு முன்பு இந்த வசதி செயலியில் கொண்டுவரப்படும்.
இதற்கு முன்பு தொலைபேசி அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குப்பதிவு சதவீதம் பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தற்போது வாக்குப்பதிவு அலுவலர்கள் நேரடியாக, வி.டி.ஆர். செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்தவித காலதாமதமும் இல்லாமல் வாக்குப்பதிவு சதவீதத்தை அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.