
சென்னை,
நான் தேமுதிகவிலிருந்து விலகுவதாக ஒருபோதும் கூறவில்லை என்று தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி விளக்கம் கொடுத்துள்ளார்.கட்சியிலிருந்து விலகுவதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர். தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்று அவர் வீடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.
அந்த விடியோவில் அவர் கூறியிருப்பதாவது, நான் அளித்த கடிதத்தில், பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கேட்டேன். விடுவிக்காதபட்சத்தில் நான் ஒதுங்கிக்கொள்வேன் என்றுதான் சொன்னேன். இது ஊடகங்களில் தவறாக பரப்பப்பட்டு, நான் கட்சியிலிருந்தே விலகுவதாகச் சொன்னார்கள். ஒரு காலமும் நான் என்னை அறிமுகப்படுத்திய விஜயகாந்த் கட்சியிலேயே தொடர்ந்து பயணிப்பேன். உயிர் மூச்சு உள்ளவரை அவரது தொண்டனாகவே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.