
தேனி,
தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று மே 6 முதல் வரும் 13 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் மே 9 ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
இதனால் மே 6-ம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். இதேபோல தேனி மாவட்டம் கூடலூர் அருகே விண்ணேற்றிப்பாறை மலையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு திருவிழா வரும் மே 12 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.
இத்திருவிழாவை முன்னிட்டும் வரும் மே 12 ஆம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இரு விடுமுறை தினங்களை ஈடுசெய்யும் வகையில் வரும் மே 17 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் முழு வேலை நாட்களாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையை போன்றே தேனி வீரபாண்டி கோவில் திருவிழாவும் அப்பகுதியில் மிகவும் பிரபலமாகவே பார்க்கப்படுகிறது. இந்த திருவிழாவிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.