தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு, போரூரில் இருந்து இயக்கப்படும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தகவல்

4 months ago 15

சென்னை: அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூரில் அதிகபட்சமாக 150 பேருந்துகள் வரை நிறுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகளிலும் மற்றும் போரூர் டோல்கேட் அருகில் இருந்தும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை ஐகோர்ட்டில் அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மற்றும் போரூர் டோல்கேட்டில் இருந்து இயக்கப்படும். தமிழக அரசால் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் அந்த பகுதியை சேர்ந்த மற்றும் ஈசிஆர் பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் பயன்படுத்தி 20 சதவீதத்திற்கு மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஏற்றிச் செல்கிறோம்.

இந்த பேருந்து நிலையம் அப்பகுதி பயணிகளுக்கு மிக்க பயனுள்ளதாக உள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் இணைப்பை செய்து முடிக்கும்போது பயணிகளுக்கு அதிக பயன்கள் தரும். ஈசிஆர் சாலை வழியாக பாண்டிச்சேரி, பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி-பெங்களூர் செல்லும் வாகனங்கள் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு, போரூரில் இருந்து இயக்கப்படும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article