தூத்துக்குடியில் பயங்கரம் ராஜபாளையம் லோடுமேன் சரமாரி வெட்டிக்கொலை

2 months ago 10

ஸ்பிக்நகர், டிச.19: தூத்துக்குடியில் லோடுமேன் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். போதை தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் தேன்பாவணி(52). இவருக்கு 3 மகன், 1 மகள் உள்ளனர். குடும்பத்தினர் அனைவரும் ராஜபாளையத்தில் உள்ள நிலையில் தேன்பாவணி தூத்துக்குடி, முத்தையாபுரம், சூசைநகரில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். கிடைத்த இடத்தில் சாப்பிட்டு, வேலை செய்த இடத்திலேயே மது அருந்துவதும், உறங்குவதுமாக இருந்தார். இவருக்கு என்று தனியாக தங்கும் இடமோ, வீடோ எதுவும் இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்தையாபுரம் சந்திப்பு துறைமுகம் செல்லும் சாலையில் தலை, முகம் சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் தேன்பாவணி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து நேற்று காலை 5 மணி அளவில் தகவலறிந்த டவுன் ஏஎஸ்பி மதன், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேன்பாவணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தேன்பாவணி மீது பழைய வழக்குகள் எதுவும் இல்லை. அவர் தினமும் லோடுமேன் பணி முடிந்ததும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதால் அவர்களுடன் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்ததா? அல்லது லோடுமேன் வேலையில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் ஏற்பட்டு கொலை நடந்ததா? என்பது குறித்து தூத்துக்குடி முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை தொடர்பாக அவரது நண்பர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் பயங்கரம் ராஜபாளையம் லோடுமேன் சரமாரி வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article