
தூத்துக்குடி, ஆசிரியர் காலனி 6வது தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் வேலுச்சாமி (வயது 65), கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் கடந்த 19ம்தேதி காலை தனது சொந்த ஊரான கயத்தார் தெற்கு மயிலோடை கிராமத்திற்கு சென்று உறவினர்களை பார்த்துவிட்டு, இரவு தனது மோட்டார் பைக்கில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி புதிய துறைமுகம்- மதுரை பைபாஸ் ரோட்டில் மடத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்னால் இவரது பைக் மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். மேலும் லாரியை சாலையோரத்தில் நிறுத்திய டிரைவர், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகிலுள்ள பெருநாழி ஊரைச் சேர்ந்த தர்மர்(25) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.