தூத்துக்குடி: கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேர் கைது

7 hours ago 3

தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 23.12.2018 அன்று அடையாளம் தெரியாத ஆண் உடல் காயங்களுடன் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இறந்த நபரின் உடலில் உள்ள அடையாளங்கள், விரல் ரேகைகள் மற்றும் பிற அடையாளங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபர் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியை சேர்ந்த ராஜாமணி மகன் பொன்னுச்சாமி(எ) குமார் (வயது 42) என்பது தெரியவந்தது.

பின்னர் இவ்வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையில் உறுதியான ஆதாரங்கள் கிடைக்காமலும் குற்றவாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு விசாரணைகள் நடந்தும் இவ்வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக தீர்வின்றி இருந்து வந்தது.

இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் விளாத்திகுளம் உட்கோட்ட டி.எஸ்.பி. அசோகன் மேற்பார்வையில், தாளமுத்துநகர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், நாலாட்டின்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, கோவில்பட்டி கிழக்கு ஏட்டு கார்த்திக்ராஜா, விளாத்திகுளம் முதல் நிலை காவலர் சரவணகுமார், கோவில்பட்டி கிழக்கு காவலர் கார்த்திக் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்ட முந்தைய சாட்சிகள், டிஜிட்டல் ஆதாரங்கள், சந்தேகப்படும் நபர்களின் உடலில் உள்ள காயங்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கூறிய தகவல்கள் ஆகியவற்றை மீண்டும் ஆராயப்பட்டது. மேலும் கொலைக்குப் பிறகு கிராமத்தை விட்டு சென்றவர்கள் யார் யார் என தனித்தனியாக கண்டறியப்பட்டனர்.

இதனையடுத்து மேற்சொன்ன போலீசாரின் தீவிர விசாரணையில் புதிய ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டதில் விளாத்திகுளம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான கண்ணுச்சாமி மகன் கோபாலகிருஷ்ணன்(எ) கோடாங்கி (64), இமானுவேல் மகன் கருப்பசாமி (40), சிவதாசன் மகன் ராஜராஜன் (36) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் ராமகிருஷ்ணன் (55) ஆகியோர் என்பதும் அவர்களை நேற்று முன்தினம் (11.5.2025) கைது செய்து விசாரணை நடத்தியதில் 7 ஆண்டுகளுக்கு முன் மதுபானம் அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் பொன்னுச்சாமி(எ) குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

மேற்சொன்ன கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்நுட்ப ரீதியாகவும், பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை காவல் துறையினரை நேற்று (12.5.2025) மாவட்ட எஸ்.பி. சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

Read Entire Article