
தருமபுரி மாவட்டம் முத்தம்பள்ளியை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி முத்துலெட்சுமி. இந்த தம்பதிக்கு 7 வயதில் பெண் குழந்தையும், 9 மாத நரணிஷ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.
இதனிடையே, ராஜதுரை கோவையில் வேலை செய்துவரும் நிலையில் குடும்பத்துடன் நேற்று கோவைக்கு புறப்பட்டுள்ளார். சேலத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ்சில் நேற்று இரவு புறப்பட்டுள்ளனர். ராஜதுரையும் அவரது மனைவி முத்துலெட்சுமியும் குழந்தைகளுடன் நடத்துனரின் இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சென்றுகொண்டிருந்தபோது பஸ் டிரைவர் திடீரென பிரேக் படித்ததால் பின் இருக்கையில் இருந்த ராஜதுரை நிலைதடுமாறியுள்ளார். அப்போது அவர் தோளில் இருந்து அவரது மகன் நரணிஷ் நழுவி பஸ்சின் முன்பக்க கதவு வழியாக சாலையில் விழுந்தார். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தியுள்ளார். பஸ்சில் இருந்து சாலையில் விழுந்த குழந்தை படுகாயமடைந்துள்ளது.
இதையடுத்து குழந்தையை மீட்ட பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தை நரணிசை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.