ரெட்டிச்சாவடி, டிச. 6: சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் பல்வேறு இடங்களில், கால்வாய்களின் கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தூக்கணாம்பாக்கம் அடுத்த எம்பி அகரம் கிராமம் அருகே செல்லும் பாகூர் பங்காரு கால்வாய் கரையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு திடீரென உடைப்பு ஏற்பட்டது.
இதனால் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக ஊழியர்களுடன் சென்று, கிராம மக்கள் உதவியுடன், படகு மூலம் மணல் மூட்டைகள் கொண்டு சென்று கரை பகுதிகளில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து சரி செய்தனர். உடைப்பு ஏற்பட்ட இடத்தில் உடனடியாக சரி செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றின் கரையோரமாக எந்தெந்த பகுதிகளில் கரைகள் பாதிப்படைந்து வருகிறது என்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அந்த இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து சரி செய்து வருகின்றனர்.
The post தூக்கணாம்பாக்கம் அருகே கால்வாய் கரை உடைப்பு appeared first on Dinakaran.