![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/10/38712449-8.webp)
சென்னை,
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' மற்றும் 'வாழை' உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார்.
இதைத் தொடர்ந்து ஆதித்யா வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'பைசன் காளமாடன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.