
சென்னை,
சென்னை அசோக்நகர் 7-வது அவென்யூவை சேர்ந்தவர் கலையரசன் (வயது 23). இவர் அசோக்நகர் புதூர் 13-வது தெருவை சேர்ந்த தமிழரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டாக கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
எனினும் குடும்ப பிரச்சினை புகைந்து கொண்டே இருந்துள்ளது. கலையரசன் கடந்த ஆண்டு தமிழரசியின் சகோதரர் சக்திவேலை (20) தாக்கியுள்ளார். இதனால் கலையரசனை பழி தீர்க்க மற்றொரு சகோதரர் சஞ்சய் (18) திட்டம் போட்டு காத்திருந்தார். இதற்கிடையே காயமடைந்த சக்திவேல் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார்.
இந்த நிலையில் கலையசரன் கடந்த 15-ந்தேதி அன்று அசோக்நகர் புதூர் 8-வது தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சஞ்சய், சக்திவேல் மற்றும் அவரது நண்பர் சுனில்குமார் (20) ஆகிய 3 பேரும் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் காயமடைந்த கலையரசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அசோக்நகர் போலீசார் கொலைமுயற்சி வழக்கின் கீழ் சஞ்சய், சக்திவேல், சுனில்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலையரசன் உயிரிழந்தார். இதையடுத்து கைதான 3 பேர் மீது கொலைவழக்கு பாய்ந்தது.
இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட கலையரசனின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் இந்த படுகொலைக்கு பின்னணியில் தமிழரசியும், அவரது நண்பர் சரவணன் என்பவரும் மற்றும் தமிழரசியின் குடும்பத்தினரும் செயல்பட்டதாக குற்றம் சாட்டி அசோக்நகர் போலீசில் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாகவும் அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் விசாரணையில் கலையரசன் கொலைக்கு சதித்திட்டம் தீட்டி பின்னணியில் இருந்து செயல்பட்டது தமிழரசியும், அவரது நண்பர் சரவணனும் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்த போது தலைமறைவாகி விட்டனர். இந்தநிலையில் தமிழரசி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரிடம் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடந்தது.
அவரது தாயார் சந்தியா (65) என்பவரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளதாகவும் அவரையும் தேடிவருவதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கில் சஞ்சய் என்ற இன்னொரு உறவினரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கலையரசன் கொலை வழக்கில் மனைவி தமிழரசி, மைத்துனர்கள் சஞ்சய், சக்திவேல், மற்றும் சுனில் குமார் ஆகியோர் ஏற்கனவே கைதான நிலையில் தலைமறைவாக இருந்த மாமியார் சந்தியாவும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசோக்நகர் பகுதியில் இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.