துணிவே வெற்றியின் அடித்தளம்

1 month ago 6

மனிதர்களோ,சூழ்நிலைகளோ உங்களை அச்சத்திற்குள்ளாக்க நீங்கள் அனுமதித்தால் மிகச் சிறந்த வாய்ப்புகளை நீங்கள் இழக்க நேரிடும்.நான் தொடரத்தான் போகிறேன், விளைவுகளை எதிர்கொள்ள தயாராகிறேன் என்று தன்னம்பிக்கையோடு உங்களுக்குள் நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.இந்த ரேஸில் நான் தோற்றுவிடுவேனோ என்று அஞ்சினால் பந்தயத்தில் எப்படி பங்கேற்பீர்கள். எல்லா பந்தயங்களுமே இரண்டு விளைவுகளைக் கொண்டவைதான், தோற்பது அல்லது வெல்வது மட்டுமே.என் தோல்விக்கான சாத்தியங்களை விட, வெற்றிக்கான சாத்தியங்களை நான் அதிகரித்துக் கொள்வேன் என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது வெற்றுச் சொல்லாக இல்லாமல் உறுதிப்பட சொல்லும் சொல்லாக இருக்கட்டும்.

உலகம் தட்டையானது என்று உலக அறிஞர்கள் அடித்துச் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், கலிலியோ என்கிற விஞ்ஞானி ‘உலகம் உருண்டையானது, அது சுழல்கிறது! என்ற மாற்றுக் கருத்தை முன் வைத்தார். பலத்த எதிர்ப்பு, அவருடைய உயிருக்கே ஆபத்து வந்தது. ஆனால் கொஞ்சமும் பின்னடையாமல் தாம் கண்டறிந்த உண்மையை நிரூபணங்கள் மூலம் நிறுவினர் அவர். சாக்ரடீஸ் தவறான கருத்துக்களைக் கண்டித்ததால் நஞ்சருந்திச் சாகும்படி தீர்ப்புச் செய்யப்பட்டது. தாமஸ் மூர் என்கிற எழுத்தாளர் தம்முடைய கருத்தை மாற்றிக்கொள்ள மறுத்ததால் சிரச்சேதம் செய்யப்பட்டார். எத்தனையோ மேதைகள் மீது இந்த உலகம் காறி உமிழ்ந்தது. கல்லெறிந்தது, நாடு கடத்தியது.இங்கர் சால், வால்டேர் போன்ற மேதைகள் தங்களுடைய புதுமைக் கருத்துக்களை அஞ்சாமல் பரப்பி மக்களே சிந்திக்க வைத்தார்கள். துணிவே அவர்களுடைய உந்து சக்தி. சாதனையாளர்கள் துணிவு ஒன்றையே துணையாய்க் கொண்டு சாதனைகளை நிகழ்த்துகிறார்கள். உங்களை நிலைகுலையச் செய்யும் எந்த நிகழ்வாலும் பாதிக்கப்படாதவராயிருங்கள்.ஏன் என்றால் துணிவு தொடங்கி வைக்கிறது,துணிவு நடத்திச் செல்கிறது,துணிவு முடித்து வைக்கிறது.போரில் எதிரியை வெல்வது சாதனையாகவும், ஆன்மிகத்தில் தன்னை வெல்வது சாதனையாகவும் கருதப்படுகின்றது. தன்னை வென்று பெறுவதே பெரிய வெற்றி என்கிறார் புத்தர். நீங்கள் போட்டி போட வேண்டியது உங்களோடுதான், முந்திச்செல்ல வேண்டியதும் உங்களைத்தான்.

உங்கள் சாதனை உங்களுக்கு மகிழ்ச்சியும், மன நிறைவும் அளிப்பதாயிருக்கட்டும், உங்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கும்.யார் தம்முடைய கனவுகளைத் துணிவுடன் காட்சி ஆக்கி பார்க்கத் தெரிந்தவரோ, திடநம்பிக்கை கொண்டு அதன் பேரில் செயல்படுகிறாரோ, யார் போக்குகளைத் தனக்கு சாதமாக்கிக் கொள்ளக் கூடியவரோ, யார் இடர்ப்பாடுகளைக் கடக்கும் வல்லமை கொண்டவரோ அவரையே வெற்றித் தேவதை வந்தடைகிறாள்.மிகப்பெரியதாய் கனவு காணவும், மிகச்சிறந்தவைகளை எதிர்பார்க்கவும் யாரால் முடிகிறதோ, யார் தடைகளையும் தோல்விகளையும் கண்டு அஞ்சுவதில்லையோ, யாருக்குப் பாதகமானதை சாதகமாய் மாற்றத் தெரிகிறதோ அவரே வெற்றியாளராய் சாதிக்கின்றார்கள்.இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியைச் சொல்லலாம்.

விமானத்தை இயக்கும் பைலட்டுகளாக ஆண்கள் பெரும்பாலும் இருப்பது வழக்கம். பெண் ஒருவர் விமான ஓட்டியாக இருப்பதே அசாதாரணமான விஷயம் தான், அப்படி இருக்கும்போது போர் விமானத்தை ஒற்றை ஆளாய் விண்ணில் ஓட்டி இந்தியாவின் முதல் ஜெட் ரகப் போர்விமானப் பெண் பைலட் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் அவானி சதுர்வேதி எனும் 27 வயது பெண். இந்த பயணத்தை குஜராத் மாநிலத்தில் உள்ள இந்திய விமான படையின் ஜாம்நகர் தளத்தில் இருந்து இவர் மேற்கொண்டார்.இவர் ஓட்டும் விமானம் MIG,- 21, பைசன் ரகத்தைச் சேர்ந்தது. மணிக்கு 340 கிலோமீட்டர் வேகத்தில் தரையிலிருந்து எழும்பவும், தரையிறங்கவும் இந்த விமானத்தால் முடியும். இது உலகிலேயே மிக அதிகமான தரையிறங்கும் மற்றும் மேலெழும்பும் வேகமாகும்.விமானப்படையில் பிளைட் லெப்டினன்ட் பதவி வகிக்கும் இவர். மத்திய பிரதேசம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.இவரே போர் விமானத்தை ஒற்றையாய் இயக்கிய முதல் பெண் பைலட் என அறிவிக்கப்பட்டுள்ளார். தந்தை தினகர் மத்திய பிரதேச அரசின் நீர் ஆதாரத்துறையில் மேற்பார்வை பொறியாளராக பணியாற்றுகிறார், தாய் இல்லத்தரசி.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாடோல் மாவட்டத்தில் இருக்கும் டியோலோண்ட் என்ற சிறிய நகரத்தில் இவரது பள்ளிப்படிப்பை முடித்தார். 2014 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள பனாஸ்தலி பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப இளங்கலைப் பட்டம் பெற்றார்.இவருக்கு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்றால், இவருடைய சகோதரர் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக இருக்கிறார். அவரைப் பார்த்து ராணுவத்தில் சேர ஆர்வம் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது. சில மணிகள் வானில் பறந்த அனுபவங்களும் அவருக்கு உண்டு. இவை எல்லாம் தான் இந்திய விமானப்படையில் சேரும் உத்வேகத்தை இவருக்கு அளித்தன.இவரது பயிற்சி ஹைதராபாத் ஏர்போர்ட் அகடமில் துவங்கியது. தனது 25 வயதில் பயிற்சியை முடித்தார்.ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு ஜூன் 2016 ஆம் ஆண்டு போர் விமான பயிலட்டானார். அதன் பின்னர் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பிடர் என்ற இடத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டார். தேஜஸ் ரக ஜெட் போர் விமானங்களை ஓட்டும் தகுதியைப்பெற்றார்.

பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் போன்ற சில நாடுகளே ஜெட் ரகப் போர்விமானப் பைலட்டு களாகப் பெண்களை நியமித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.2018 ஆம் ஆண்டு MIG-21 ரக போர் விமானத்தை ஓட்டிய இந்தியாவின் முதல் ஒற்றைப் பெண் பைலட் என்ற பெருமையும் கிடைத்தது. அதே ஆண்டு பிளைட் லெப்டினென்ட் ஆகப் பதவி உயர்வும் பெற்றார்.அதன் பின்னர் இந்திய விமானப்படை 23 ஸ்க்வாட்ரன் ராஜஸ்தானி மாநில சூரத்கரில் பணியமர்த்தப்பட்டார்.இந்த சாதனைப் பெண்ணுக்கு விருதுகளும் தேடி வந்தன. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியக் குடியரசுத் தலைவர் நாரி சக்தி புரஸ்கார் விருதினை அவானி சதுர்வேதிக்கு அளித்தார். சாதிப்பதற்கு வானமே எல்லை என யார் சொன்னது? வானில் போர் ரக வாகனத்தைத் தனியே ஓட்டும் பெண்ணுக்கு வானம் கூட எல்லை இல்லை! துணிச்சலும், வலிமையும் கொண்டவர்கள்தான் காலங்காலமாய் இந்த உலகில் வெற்றி பெற்றுச் சாதனை படைக்கின்றார்கள் என்பதற்கு அவானி சதுர்வேதியின் வாழ்க்கை மிகச் சிறந்த உதாரணமாகும்.

The post துணிவே வெற்றியின் அடித்தளம் appeared first on Dinakaran.

Read Entire Article