செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சினேகா, தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் தாலுகா வாரியாக விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர்.
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், 10.6.2025 அன்று அச்சரப்பாக்கம், சிறுபேர்பாண்டி கிராமம் மற்றும் பெரும்பேர்கண்டிகை ஆகிய கிராமங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயகளின் 10 கால்நடைகளுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.2,50,000த்திற்கான நிவாரண தொகை ஆணையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்கள். மேலும், வேளாண்மை துறை சார்பில் 6 நபர்களுக்கு உளுந்து விதை, நுண்ணீர் பாசன பணி ஆணை, ஜிங்க் சல்பேட், குறுவை தொகுப்பு திட்டம் ஆகிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளிடமிருந்து பல்வேறு விதமான கோரிக்கைகள் மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்டது. குறிப்பாக, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவை தொகையினை முன்னுரிமை அடிப்படையில் அளிக்காமல் முறைபடுத்தி வழங்க வேண்டுமென்றும், கால தாமதமின்றி வழங்க வேண்டுமென்றும் விவசாயிகள். கலெக்டரிடம் தெரிவித்தனர். கௌரிவாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
கலெக்டர் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து உடனடியாக சரி செய்து இரண்டு நாட்களில் அறிக்கை அளிக்குமாறு அறிவுறுத்தினார். இந்த பருவத்தில் கேழ்வரகு சாகுபடி அதிகளவில் நடைபெற இருப்பதால் அதற்கான விதைகளை வேளாண்மை துறையினர் உடனடியாக அளிக்க வேண்டுமென்று விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தார். வேளாண்மை துறை அலுவலர்களிடம் விவசாயிகளுக்கு தேவையான விதைகளை இருப்பு வைக்குமாறும், விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி விதைகளை அளிக்க அறிவுறுத்தினார்.
மேலும், பட்டா மாற்றம், குடிநீர் வசதி, வடிகால் வசதி, சாலை வசதி, போன்ற கோரிக்கைகள் அதிகளவில் விவசாய சங்க பிரதிநிதிகளால் அளிக்கப்பட்டது. கோரிக்கைகள் மீது துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
மேலும், ஒரு வார காலத்திற்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தனக்கு அறிக்கை அளிக்க வேண்டுமென்றும், நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தினால் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட கலெக்டருக்கு விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் வாழ்த்துக்களை தெரிவித்து சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
இதில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) நாராயண சர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வரி, இணை இயக்குநர் (வேளாண்மை) பிரேம் சாந்தி, முதன்மை மண்டல மேலாளர் ரேணுகாம்பாள், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மின்சார வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன், படாளம் கூட்டுறவு சக்கரை ஆலை மேலாளர் காமாட்சி, கூட்டுறவு இணை பதிவாளர் நந்தகுமார், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
The post விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சினேகா வழங்கினார் appeared first on Dinakaran.