சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி மகளிர் சுய உதவி குழுவினர் தயாரிக்கும் இனிப்பு மற்றும் கார வகைகள் மதி தீபாவளி பரிசு பெட்டகத்தை அதிக அளவில் மக்கள் வாங்கி பயன்பெற வேண்டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை, முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தீனதயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.95,109 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 32,364 பள்ளிகளில் 15,16,128 மாணவ-மாணவியர் பயன்பெறும் வகையில் 50,985 சுய உதவிக்குழு மகளிர் காலை உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை அதிக அளவில் சந்தை படுத்துவதற்காக மதி சந்தை விற்பனை இணைய தளம் தொடங்கப்பட்டு 18.11.2023 அன்று முதல் செயல்பட்டு வருகின்றது. 36 ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் 92,016 ஊரக இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டதுடன், 50,841 இளைஞர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு, சுய வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 731 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1,01,674 இளைஞர்கள் வெவ்வேறு தொழில் நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 45,043 நகர்ப்புற இளைஞர்களுக்கு ரூ.76.60 கோடி செலவில் வேலைவாய்ப்புடன் கூடிய திறன்வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு, 32,431 இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 7.5.2021 முதல் 3,235 உற்பத்தியாளர் குழுக்களுக்கு தொடக்க நிதியாக ரூ.24.26 கோடி நிதியும், 760 தொழிற் குழுக்களுக்கு தொடக்க நிதியாக ரூ.5.70 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்து வரும் சுவையான இனிப்பு மற்றும் கார வகைகள் மதி தீபாவளி பரிசு பெட்டகம் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மதி தீபாவளி பரிசு பெட்டகத்தை அதிக அளவில் மக்கள் வாங்கி பயன்பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஸ்ரேயா சிங், மற்றும் கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தீபாவளிக்காக சுய உதவி குழுவினர் தயாரிக்கும் மதி தீபாவளி பரிசு பெட்டகத்தை மக்கள் வாங்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள் appeared first on Dinakaran.