கோவை: திருவிழாவில் குடும்பத்துடன் நகை பறிக்கும் கும்பலை சேர்ந்த 2 இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர். திருடிய பணத்தில் பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. கோவையை சேர்ந்த ஆய்ஷம்மாள் (75), வசந்தா (75) ஆகிய இரண்டு மூதாட்டிகளிடம் 11 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் பறித்துச்சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், உக்கடம் போலீசார் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித் திரிந்த 2 பெண்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் 2 மூதாட்டிகளிடம் நகையை பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த நந்தினி (28), காளிஸ்வரி (28) என்பது தெரிந்தது.
விசாரணையில், திடுக்கிடும் பல தகவல்களை இருவரும் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட நந்தினி, காளிஸ்வரி இருவரும் அண்ணன், தம்பியை திருமணம் செய்து உள்ளனர். இவர்கள் பல வருடங்களாக குடும்பத்துடன் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். காளிஸ்வரி தனது தாயாருடன் சேர்ந்து 12 வயதில் திருட்டை தொடங்கி உள்ளார். திருமணத்திற்கு பின்னர் கணவரின் அண்ணன் மனைவி நந்தினியை தன்னுடன் சேர்த்து கொண்டு திருட்டை தொடர்ந்து வந்துள்ளார். இவர்கள் இந்தியா முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடும்பத்தினருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக கோயில் திருவிழாக்களை குறிவைத்து கூட்ட நெரிசலில் பெண்களிடம் நகைகளை திருடி வந்துள்ளனர். திருடும் நகைகளை அந்தந்த பகுதிலேயே விற்று பணமாக்கி கொள்வார்கள். அந்த பணத்தை வைத்து அவர்கள் இருக்கும் தூத்துக்குடியில் பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
தங்களது பிள்ளைகளை பெரிய பள்ளிகளில் படிக்க வைத்து வருகிறார்கள். மேலும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் திருடச் செல்லும் பகுதியில் டெண்ட் அமைத்து வசித்து வந்துள்ளனர். கோவையில் துடியலூரில் டென்ட் அமைத்து தங்கியுள்ளனர். கோவையில் இருவரும் பேரூர் மற்றும் கோனியம்மன் கோயில் திருவிழா நடக்க இருப்பதை தெரிந்து கொண்டு இங்கு திருட வந்துள்ளனர். மூதாட்டிகளிடம் நகை பறித்த வழக்கில் இருவரும் சிக்கிக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 11 பவுன் நகையும் மீட்கப்பட்டது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post திருவிழாவில் குடும்பத்துடன் நகை பறித்த 2 பெண்கள் கைது: பங்களாவில் சொகுசு வாழ்க்கை; பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.