திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தைக்கு தாயாகும் நடிகை பாவனா: கன்னட, மலையாள திரையுலகில் பரபரப்பு

4 hours ago 4

பெங்களூரு: திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தைக்கு தாயாகும் நடிகை பாவனா ராமண்ணாவை பலரும் பாராட்டும் நிலையில், கன்னட, மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னடம், மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகை பாவனா ராமண்ணாவுக்கு தற்போது 40 வயதாகிறது. திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘எனக்கு 20 மற்றும் 30 வயதுகளில் தாய்மை குறித்து பெரிய ஆர்வம் இருக்கவில்லை. ஆனால், 40 வயதை எட்டியபோது, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்குள் வலுப்பெற்றது. தற்போது நான் கர்ப்பமாக உள்ளேன். தனியொரு பெண்ணாக நான் எடுத்த இந்த முடிவானது சாதாரணமாக நடைபெறவில்லை.

செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக, பல மருத்துவமனைகளை அணுகினேன். திருமணமாகாதவர் என்ற காரணத்தைக் கூறி பலரும் என்னை நிராகரித்தனர். அவர்கள் எனது விருப்பத்திற்கு உதவவில்லை. அனைத்துத் தடைகளையும் தாண்டி, தற்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். இரட்டைக் குழந்தைகளுடன் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் எனக்கு புதிய அத்தியாயம் கிடைத்துள்ளது.

மேலும், எனது இந்த முடிவு குறித்து எனது தந்தையிடம் கூறியபோது, அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். பெண்ணாகத் தாய்மை அடைவது என்னுடைய உரிமை என்று கூறி எனது தந்தை என்னை ஆதரித்தார். சிலர் எனது முடிவைக் கேள்வி எழுப்பியபோதும், நான் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்தேன்’ என்று கூறினர். இருந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தைக்கு தாயாகும் நடிகை பாவனா ராமண்ணா குறித்து கன்னட, மலையாள திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

The post திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தைக்கு தாயாகும் நடிகை பாவனா: கன்னட, மலையாள திரையுலகில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article