அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.64 லட்சம் மோசடி - 2 பேர் கைது

3 weeks ago 5

கோவை,

கோவை மாவட்டம் காரமடை அருகே மேடூரை சேர்ந்தவர் கவுதம்குமார் (வயது 29). என்ஜினீயரிங் பட்டதாரி. இவருக்கு இடிகரையை சேர்ந்த ஜெயபிரகாஷ், அவருடைய மனைவி வத்சலாதேவி, பிரகாஷ், அவருடைய மனைவி ரேகா மற்றும் சரவணகுமார் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் 5 பேரும் தங்களுக்கு அரசு அதிகாரிகள் பலரை தெரியும், தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் அரசு வேலை காலியாக உள்ளது. அதற்கு ரூ.18 லட்சம் கட்ட வேண்டும். அந்த தொகையை நீங்கள் ஓய்வு பெறும்போது வட்டியுடன் சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி உள்ளனர்.

அதை நம்பிய கவுதம்குமார், அவர்களிடம் 2022-ம் ஆண்டு ரூ.18 லட்சம் கொடுத்தார். உடனே அவரை மதுரை வரவழைத்து, நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் உதவி செயற் பொறியாளர் பணி ஒதுக்கப்பட்டதாக பணி நியமன ஆணை கொடுத்தனர். அதில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் சின்னம் மற்றும் அதிகாரிகளின் கையெழுத்து இருந்தது. உடனே கவுதம்குமார், தனக்கு நெல்லையில் வேலை வேண்டாம், கோவையில் உள்ள கோவிலில் வேலை வாங்கி கொடுங்கள் என்று கூறி உள்ளார். அதற்கு அவர்கள் ரூ.5 லட்சம் கொடுத்தால் பணியிட மாறுதல் வாங்கி கொடுப்பதாக கூறி உள்ளனர்.

அதை நம்பிய அவர், ரூ.5 லட்சம் கொடுத்தார். ஆனால் அவருக்கு பணிமாறுதல் ஆணையை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கவுதம்குமார், இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது இந்து சமய அறநிலையத்துறையில் யாரையும் பணிக்கு நியமிக்கவில்லை என்று தெரிவித்து உள்ளனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கவுதம்குமார், உடனே ஜெயபிரகாஷ் உள்பட 5 பேரையும் சந்தித்து கேட்டார். ஆனால் அவர்கள் சரியான பதில் அளிக்க வில்லை. இது குறித்த புகாரின் பேரில் கோவை மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்தார்.

விசாரணையில், அவர்கள் 5 பேரும் சேர்ந்து கவுதம்குமார் உள்பட 3 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணிநியமன ஆணையை கொடுத்து ரூ.64 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. உடனே ஜெயபிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவான வத்சலாதேவி, ரேகா, சரவணகுமார் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Read Entire Article