
திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதி மலைப்பகுதி அடிவாரத்தில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. மலை அடிவாரத்தில் வசித்து வரும் மக்களை அச்சுறுத்தும் வகையிலும், அங்குள்ள நாய்களை வேட்டையாடியும் சிறுத்தை சுற்றித்திரிவதாக தகவல் வெளியானது.
சிறுத்தை நடமாட்டம் குறித்த தகவலால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். மேலும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, வனத்துறை அதிகாரிகள் மலை அடிவாரத்தின் ஒருசில பகுதிகள் சிறுத்தை நடமாட்டத்தை அடிப்படையாக கொண்டு கூண்டுகள் வைத்தனர்.
இந்நிலையில், மலை அடிவாரத்தில் உள்ள பல்கலைக்கழகம் அருகே வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியுள்ளது. நேற்று இரவு சிறுத்தை சிக்கியுள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் விடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.