புதுடெல்லி: திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், "திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ள துயர நிகழ்வை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இந்தச் சோகச் சம்பவத்தில் உற்றாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்" என தெரிவித்துள்ளார்.