திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

1 day ago 6

கடந்த 2018-ம் ஆண்டு கோபாலசமுத்திரம், முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலாயுதம் (வயது 31) என்பவர், ஒரு சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்ச்சி செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் முன்னீர்பள்ளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, வேலாயுதம் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றவாளி வேலாயுதத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி வேலாயுதம், ஒரு சரித்திர பதிவேடு உடையவர் ஆவார். மேலும் இவர் ஏற்கெனவே கடந்த ஆண்டு திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலைய சரகத்தில் நடந்த கொலை வழக்கில் தற்போது சேலம் மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. சத்யராஜ் மற்றும் முன்னீர்பள்ளம் காவல் துறையினரையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா, புலன் விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி ஆகியோரையும் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

Read Entire Article