
தமிழக அரசு பெண்களின் உயர்வுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றும் வகையில், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டத்தினால் பெண்களுக்கு நிதி சுதந்திரமும் கிடைத்துள்ளது. தமிழக அரசுதான் இந்த திட்டத்தை முதலில் அறிவித்தது. என்றாலும், மேற்குவங்காளம்தான் முதலில் அந்த திட்டத்தை செயல்படுத்தியது.
தற்போது, மேற்குவங்காளத்தில் ஆதிதிராவிட பெண்களுக்கு மாதம் ரூ.1,200-ம், மற்ற பெண்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. அங்கு இப்போது 2 கோடியே 11 லட்சம் பெண்களுக்கு 'லட்சுமி பந்தர்' என்ற திட்டத்தின்கீழ் இந்தத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், அசாம் மாநிலம் 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி காந்திஜெயந்தி அன்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால், அந்தத்தொகை குடும்பத்தலைவியின் வங்கிக்கணக்குக்குத்தான் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது இந்த திட்டம் மத்தியபிரதேசம், கர்நாடகம், மராட்டியம், ஒடிசா, ஜார்கண்ட், இமாசலபிரதேசம், சத்தீஷ்கார், சிக்கிம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
ஆனால், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் இந்த திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை என்றாலும், புதிதாக அறிவிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, பின்னர் உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற 'புதுமைப்பெண் திட்டம்' 2022-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் இந்த திட்டம் 2024-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும், தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவிகள் மத்தியிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் இந்த புதுமைப்பெண் திட்டத்தினால் உயர்கல்வியில் மாணவிகள் இடைநிற்றல் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வந்ததால், கல்லூரிகளில் கூடுதலாக 34 சதவீதம் மாணவிகள் சேர்ந்திருக்கின்றனர். அந்தவகையில் புதுமைப்பெண் திட்டம் வாயிலாக கடந்த மார்ச் மாதம் வரையிலான நிலவரப்படி, கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 636 பேரும், அதற்கடுத்தபடியாக என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் 57 ஆயிரத்து 631 பேரும், மருத்துவப் படிப்புகளில் 45 ஆயிரத்து 773 பேரும், இதேபோல் வேளாண்மை, வணிக நிர்வாகம், கணினி பயன்பாடுகள், கல்வியியல், மீன்வளஅறிவியல், ஐ.டி.ஐ., சட்டம், தொழிற்படிப்பு, இசை மற்றும் நுண்கலை படிப்புகளில் என மொத்தம் 4 லட்சத்து 6 ஆயிரத்து 65 பயனாளிகள் பயனடைந்து இருக்கின்றனர்.
இந்த கல்வி ஆண்டிலும் இந்த ஆயிரம் ரூபாயை மனதில் வைத்து ஏராளமான மாணவிகளும் கல்லூரிகளை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சென்னை நந்தனம் இருபாலர் கலைக்கல்லூரியில், கடந்த கல்வியாண்டை காட்டிலும் நடப்பாண்டில் 10 மடங்கு அதிகமாக இளங்கலை படிப்புகளில் மாணவிகள் சேர விண்ணப்பித்துள்ளனர். ஆக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட புதுமைப்பெண் திட்டம் மாணவிகளின் உயர்கல்விக்கான பாதையை திறந்து வைத்திருக்கிறது. பெண் கல்வியை மட்டுமல்லாமல், நலிந்த பிரிவில் உள்ள மாணவிகளையும் கைதூக்கிவிடும் வகையில் அமைந்துள்ளது. இதுபோல, 'தமிழ் புதல்வன்' திட்டமும் மாணவர்களின் உயர்கல்விக்கு ஏணிப்படியாக இருந்து வருகிறது.