
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கையொட்டி பக்தர்கள் வசதிக்காக ஏற்பாட்டு செய்யப்பட்டுவரும் பணிகளை கனிமொழி எம்.பி. இன்று ஆய்வு செய்தார். வாகன நிறுத்துமிடங்கள், பொதுமக்கள் நடைபாதைக்காக அமைக்கப்பட்ட மரப்பாலம் உள்ளிட்டவற்றை கனிமொழி ஆய்வு செய்தார்.
அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.