
புலவாயோ,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி புலவாயே நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரரான டோனி ரன் ஏதும் எதுக்காமல் ஆட்டமிழந்தார். பிரீட்ஸ்கே(13), வியான் மல்டர்(17), டேவிட் பெண்டிகம்(0), அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 56 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டது.
பவுமா, மார்க்ரம், ஸ்டப்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இல்லாததால் அந்த அணிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ப்ரிட்டோரியஸ்-ப்ரெவிஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.