திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த சிவாச்சாரியார்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுமதி

5 hours ago 3

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற ஜூலை 7-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி பெருந்திட்ட வளாக பணிகளும், பல்வேறு திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது.

அதேபோல் கோவில் மேல்தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் ஆகிய சுவாமிகளின் கோபுர விமான கலசங்கள் புதுப்பிக்கும் பணியும், தங்க தகடுகள் ஒட்டும் பணியும், கும்பாபிஷேகம் தொடர்பான மற்ற பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன.

மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்காக ராஜகோபுரத்தின் கீழ் பகுதியில் பூமி பூஜை செய்யப்பட்டு பந்தல்கால் நடப்பட்டது. பின்னர், அந்த இடத்தில் 8 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட யாகசாலை பந்தல் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. யாகசாலை பந்தலில் 76 ஓமகுண்டங்கள் அமைக்கப்படுகின்றன.

வருகிற 1-ந் தேதி மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கி, 7-ந் தேதி அதிகாலை வரை 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். 7-ந்தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர விமான கலசங்கள், சுவாமி மூலவர், சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்கபெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி நேற்று மாலையில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் செப்புக்கொடிமரம் அருகில் உள்ள கல்யாண விநாயகர் சன்னதி முன்பு கோவில் நிர்வாகம் சார்பில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோரிடம் இருந்து பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார், தூத்துக்குடி செல்வம் பட்டர் மற்றும் திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் தாம்பூலம் பெற்று, கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்துவதற்கான அனுமதி பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், கோவில் உள்துறை கண்காணிப்பாளர்கள் சுபிதா, விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article