
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் திருச்செந்தூர், நடுநாலு மூலைகிணறு பகுதியைச் சேர்ந்த குன்னிமலையான் மகன் அருள்செல்வம் (வயது 25) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் நேற்று (23.04.2025) தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளியான அருள்செல்வத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு பரணி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.