
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 7ம்தேதி வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜிபிஎஸ் கருவி மற்றும் 360 டிகிரி சுழலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட 10 இருசக்கர வாகனங்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் ஆகியவற்றை இன்று தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் முன்பாக கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன்படி இந்த திருவிழாவை முன்னிட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் இயங்கும் மேற்சொன்ன காவல்துறை ரோந்து வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று குற்ற சம்பவங்களை தடுக்கவும், 360 டிகிரி சுழலும் சிசிடிவி கேமரா மூலம் வாகனத்தில் இருந்து சந்தேகப்படும்படியாக உள்ள நபர்களை நேரடியாக கண்காணித்தும், டிரோன் கேமராக்கள் மூலமும் அனைத்து இடங்களையும் கண்காணித்தும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேற்சொன்ன ரோந்து வாகன துவக்க விழாவின் போது திருநெல்வேலி சரக காவல்துறை டிஐஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி நகர கோட்ட ஏஎஸ்பி மதன், திருச்செந்தூர் உட்கோட்ட டிஎஸ்பி மகேஷ்குமார் உட்பட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.